21 December 2013

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்

வணக்கம். இன்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழியை நிறைவு செய்தேன். அதிலிருந்து ஒரு பாடலை உரையுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

பெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியைக்கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கண்மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ! (எண்.628)

முன்பு பெரிய வெள்ளம் வந்தபோது ஓர் ஆலந்தளிரிலே குழந்தை வடிவாய்க் கொண்டு உலகங்களை எல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கியவனே! கால்வாய்களிலேயுள்ள இரத்தினங்களைக் கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே! திருவாலி திருநகரிக்குத் தலைவனே! அயோத்திக்குத் தலைவனே! தாலேலோ. 


 
இதற்கு முன்னர் படித்து நிறைவு செய்த பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு பாடலும் உரையுடன். 

(1) பெரியாழ்வார் திருமொழி : பெரியாழ்வார்
தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி. (எண்.78)

வானில் விளங்கும் சந்திரனே! வெண்மையான நிலாவை உடைய முற்றத்தில் வந்து நீ, நான் விளையாடும்படி வருவாயாக என்று, சந்திரனை அழைத்து நின்று கொண்டு உன்னைப் புகழ்கின்ற ஆயர்களுடைய தலைவராகிய நந்தகோபர் மகிழும்படி, சப்பாணி கொட்டுக. திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருப்பவனே! சப்பாணி கொட்டுக.

(2) திருப்பாவை: ஆண்டாள்
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் - அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று - ஏலோர் எம்பாவாய். (எண்.484)

மாசற்ற மாணிக்கங்கள் பதித்த மாளிகையில் எல்லாத் திசைகளிலும் விளக்குகள் எரிய, அகிற் புகையின் நறுமணம் தவழ, தூங்குவதற்கான படுக்கையில் உறங்குகின்ற மாமன் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து விடு. (அவள் அசையாமல் உறங்கிக் கொண்டிருக்க அவள் தாயிடம் முறையிடுகிறார்கள்) மாமியாரே! அவளை எழுப்புவீர்களா? உங்கள் மகள் ஊமையோ? அல்லது செவிடோ? ஆழ்ந்த தூக்கமோ? அல்லது நெடுநேரம் தூங்குமாறு மந்திரத்தினால் கட்டுப்பட்டாளோ? மாமாயவன், மாதவன், வைகுந்தன் என்னும் அவனுடைய பல திருநாமங்களைப் பாடினோம்

(3) நாச்சியார் திருமொழி : ஆண்டாள்
பால் ஆலிலையில் துயில் கொண்ட
பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய் தாற்போல்
வேண்டிற்று எல்லாம் பேசாதே,
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
குடந்தைக் கிடந்த குடம் ஆடி,
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
நெறி மென் குழல் மேல் சூட்டிரே. (எண்.628)

பால் பாயும் பருவமுடைய ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளிய பெருமானுடைய வலையிலே அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து, வேலாயுதத்தை இட்டுத் துளைத்தாற்போல (கொடுமையாக) உங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்வதைத் தவிர்த்து, இடைப் பிள்ளையாய் (இடைச்சாதிக்குரிய) கோலைக் கொண்டு பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய், திருக்குடந்தையில் திருக்கண் வளந்தருளுமவனாய்க் குடக் கூத்தாடியவனுமான கண்ணபிரானுடைய பசுமை பொருந்திய குளிர்ந்த அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து நெறிப்புக் கொண்டதாயும், மென்மையாயும் உள்ள என் கூந்தலிலே சூட்டுங்கள்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011

2 comments: